இந்தியாவில் மீண்டும் அவசர நிலை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மோடியை மறைமுகமாக தாக்கிய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தற்போது “சர்வாதிகாரியாக நடந்து கொண்டால் மக்கள் பாடம் புகட்டுவார்” என்று மோடியை மீண்டும் மறைமுகமாக தாக்கியுள்ளதால் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஜ்பாய் காலத்தில் இருந்தே பிரதமர் பதவியின் மீது கண் வைத்திருந்த அத்வானி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்படுவார் என பெரும் நம்பிக்கையில் இருந்தார். ஆனால் திடீரென நரேந்திர மோடி உள்ளே புகுந்து பாஜகவின் முக்கிய தலைவர்களின் நம்பிக்கையை பெற்று பிரதமர் ஆகிவிட்டதால் அத்வானி பெரும் ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் ஒருவருட காலம் அமைதியாக இருந்த அத்வானி, தற்போது மோடிக்கு எதிர்க்கட்சியில் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் வரத்தொடங்கியதை அடுத்து மோடியை நோக்கி மறைமுக தாக்குதல் தொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த அத்வானி, ” இன்றைய தலைவர்கள், வாஜ்பாய் மாதிரி அடக்கமானவர்களாக திகழ வேண்டும். பணம் சம்பாதிப்பவர்கள், அதை இழக்க விரும்பாததைப் போலவே, பதவிக்கு வருபவர்களும் அதை இழக்க விரும்புவது இல்லை. ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க இப்போதைய தேவை அரசியல்சட்ட பாதுகாப்பு அம்சங்கள் அல்ல. பதவியில் இருப்பவர்களின் அரசியல் உறுதிப்பாடுதான். அது இல்லாததுதான் கவலை அளிக்கிறது” என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.