shadow

நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். மு.க.ஸ்டாலின்

mk stalinகடந்த வாரம் திமுக எம்.எல்.ஏக்கள் 79 பேர்களை சபாநாயகர் தனபால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதை அடுத்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் சஸ்பெண்ட் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்றும் கூறியுள்ளது.இந்நிலையில் சட்டசபை உறுப்பினர் விடுதியில் திமுக எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டும், அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால் தான், நீதிமன்றத்தை நாங்கள் அணுகி தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

முதல்வர் பங்கேற்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கையில் நாங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நாங்கள் கலந்து கொண்டு பேசக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு பேரவையில் இருந்து எங்களை வெளியேற்றி உள்ளார்கள்.

மேலும், பேரவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவிடாமல் எங்களை சஸ்பெண்டு செய்துள்ளார்கள். எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் குவிக்கப்பட்டுள்ள போலீசும், பந்தோபஸ்துமே உதாரணம்.

ஊடகங்கள் மீது மட்டுமல்ல, அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகள் போடப்படுகிறது. தமிழகத்தில் பலவித கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை மானியம் நடைபெறும் இன்றைக்குகூட, கோயில்களில், தனியார் நிறுவனங்களில் கொள்ளைகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது. அதற்காக ஊடகத் துறையினர் தான் போராட வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, சட்டப்பேரவையில் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply