காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணியை காணவில்லையா? போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு
நாகர்கோவில் அருகேயுள்ள விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணியை காணவில்லை என அந்த தொகுதியில் உள்ளவர்கள் சிலரால் ஒட்டப்பட்ட பேனர் ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதம் செய்து வரும் எம்.எல்.ஏ விஜயதாரணி, தனது தொகுதிப்பக்கமே வருவதில்லை என்று கடந்த சில மாதங்களாக புகார்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவரை காணவில்லை என்ற போஸ்டரை மர்ம நபர்கள் சிலர் ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்ததால் விஜயதரணி ஆத்திரம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது, “நான் வாரத்தில் 3 நாள் தொகுதியில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறேன். ‘கிராமம் போவோம் மக்களை சந்திப்போம்’ என்கிற நிகழ்ச்சி மூலம் நானே மக்களை நேரடியாக தேடிச்சென்று சந்தித்தும் வருகிறேன்.
எனது தொகுதி மலைப் பகுதி. இங்கே பல வருடங்களாக சாலை வசதியில்லாமல் இருந்த பகுதிகளில் சாலை வசதி, பாலம் அமைத்து கொடுத்தல் போன்ற பணிகளையும் தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் அதிகாரிகளை சந்தித்து, செயல் வடிவில் கொண்டு வந்திருக்கிறேன்.
அடிக்கடி நான் தொகுதி மக்களை சந்திப்பது, நலப்பணித் திட்டங்களை தொடங்கி வைப்பது என செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போதும் கூட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்தளவு நலப்பணிகளை செய்து வருகிறேன்.
வாரத்தில் இரண்டு நாள் சென்னையிலிருந்து அதிகாரிகளை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறேன். என்னை காணவில்லை என்று பேனர் வைத்த இடத்தின் அருகே மறுநாள் நான் நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன். வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு சில கட்சிகள் இப்படி நகைப்புக்குரிய வேலைகளை செய்கிறார்கள்” என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.