சட்டசபையில் நேற்று காலையில் கேள்வி நேரம் முடிந்ததும், உறுப்பினர் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) சென்னையில் ஓடக்கூடிய சிறிய பேருந்துகளில் இடம்பெற்றுள்ள இலைகள் ஓவியம் குறித்து பேசினார்.

இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23-10-2013 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 புதிய சிற்றுந்துகளையும், 610 புதிய பேருந்துகளையும் தொடங்கி வைத்தார். 50 சிற்றுந்துகளில் 4 நாட்களில் மட்டும் 1,13,149 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை திமுக தலைவர் கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எனவே, சிற்றுந்துகளில் அ.தி.மு.க. கட்சியின் சின்னம் வரையப்பட்டுள்ளது என்ற ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்க வைத்துள்ளார். சிற்றுந்துகளில் அ.தி.மு.க.வின் சின்னமான “இரட்டை இலை” பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புகைப்படங்களுடன் 25-10-2013 அன்று சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகரில் தொடங்கிவைத்த புதிய சிற்றுந்துகள் மக்களுக்கு நன்மை பயக்கிறதா, மக்கள் பலன் அடைகிறார்களா என்பதைப் பார்க்காமல், அந்த சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தோடு இணைத்துப் பேசுவது, குற்றஞ்சாட்டுவது “தேவைதானா” என்பதை தி.மு.க. உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்கே ஏதாவது நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்களோ என்ற ஐயம்தான் எழுகிறது. தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்று பேசுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க. உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறையின் சாதனை – போக்குவரத்துத்துறையின் அனைத்து சொத்துகளும் வங்கியில் அடமானம், திவாலாகிப் போன போக்குவரத்துத்துறை என்பதை நாடு அறியும், தொழிலாளர்கள் அறிவார்கள். முதலமைச்சரின் நேர்மிகு பார்வையில் தமிழக போக்குவரத்துத்துறை இன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடுநடை போடுகிறது.

இப்படி புகழ் வாய்ந்த தலைவரின் கரங்களால் தொடங்கப்பட்ட பேருந்துகளில் இடம் பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு இலைகளின் அடையாளம், அது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல.

மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை பற்றி, ஆத்திரத்தோடு, உண்மைக்கு மாறாக திரித்துச்சொல்லும் தி.மு.க.வினருக்கு சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அரசு சிமெண்ட் பைகளில் உதயசூரியன் படம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு “கலைஞர் காப்பீடு திட்டம்” என்று பெயர் சூட்டி தேடிக்கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்” மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள். கேட்டவற்றை, சிந்திப்பதை தெளிவுற விசாரித்து பகுத்து ஆராய்வது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய பண்பு.

கற்பனையாக, கதை வசனமாக, முன்னுக்கு பின் முரணாக, தவறான தகவல்களை இந்த சபைக்கும், ஊடகத்தினை சார்ந்த செய்தியாளர்களுக்கும் தந்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க-வினர். இந்த மண்ணின் மரமார்ந்த விஷயம் “இலை” மண்ணையும், மழையையும், காப்பது மரம். மரத்தின் அங்கமாக திகழ்வது “இலை”. மரமும் இலையும் இல்லை என்றால் காற்று இல்லை, காற்று இல்லை என்றால் பசுமை இல்லை.

மண்ணின் பெருமையை, தமிழர்களின் மரபை, மங்கல அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை நல்ல நோக்கில் சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல.

மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளனவே தவிர, அதில் உள்ளவை கழகத்தின் வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” இல்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தெள்ளத்தெளிவாக, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” 1972 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் மனங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தை சிற்றுந்துகளில் வரைந்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு கிடையாது என்பதையும், ஜனநாயகத்திற்கு எப்போதும் மதிப்பளித்து வரும் அரசு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு சார்பில் சிற்றுந்துகளை இயக்க ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழகில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு.க.வினர் இதுபோன்ற அற்ப குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். உண்மைக்கு மாறான இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்ற இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Leave a Reply