shadow

பாதரச கழிவு புகார் எதிரொலி. கொடைக்கானல் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் ஆய்வு
kodaikanal
கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து அங்கு செயல்பட்டு கொண்டிருந்த இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயாரிப்பு நிறுவனதில், மாநில கூடுதல் முதன் மைச்செயலர் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் ஸ்கந்தன் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிகரன், எம்.எல்.ஏ.க்கள் பாலபாரதி, வேணுகோபால், இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனி அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதரசக் கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. குறைந்தது 10 டன் வரை பாதரசக் கழிவுகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாதரச கழிவுகளை முழுமையாக அப்புறப் படுத்த வேண்டும். ஒரு கிலோ மண்ணை எடுத்து பரிசோதித்தால், அதில் 20 மில்லிகிராம் பாதரசக் கழிவுகள் இருக்கும். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, குழந்தைப்பேறு இல்லாமை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் இறந்து விட்டனர். நிறுவனம் மீதான வழக்கு 12 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதுவரை எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. அரசு, தொழிலாளர்கள், நிறுவன அதிகாரிகள் என 3 தரப்பினரும் அமர்ந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்’ என்று தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. .

தொழிலாளர்களின் கோரிக்கையை அடுத்து திண்டுக்கல் எம்எல்ஏ பாலபாரதி கூறியதாவது: இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடந்த அக்டோபர் 13-ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தேன். பாதரசக் கழிவுகள் குறித்து கண்டறிய அமைக்கப்படும் நிபுணர் குழுவை கண்காணிக்க உள்ளூரில் ஒரு குழு அமைக்க வேண்டும். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.

மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் ஸ்கந்தன் கூறியபோது, “கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் இருப்பதாக வந்த புகாரையடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அவர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply