shadow

மீன் குழம்பும் மண் பானையும். திரைவிமர்சனம்

1அப்பாவிற்கும் பிள்ளைக்குமிடையே நிகழும் ஈகோ மோதல் இறுதியில் எப்படி ஒரு சாரி மற்றும் சில விட்டுக் கொடுத்தல்களால் முடிவிற்கு வருகிறது? எனும் கருவை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம்.

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த பிரபு மீன் குழம்பு கடை வைத்து பெரும் புள்ளியாக திகழுகிறார். சிறு வயதிலேயே தாயை இழந்த இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி ஆஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி ஊடலும் கூடலும் ஏற்பட்டு வருகிறது. கூடவே ஆஷ்னாவால் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுடன் முட்டலும் மோதலும் இருக்கிறது.

மீன் குழம்பு கடை ஓனர் பிரபுவுக்கு தன் மகன் காளிதாஸ் தன்னுடன் சகஜமாகவும் ஒரு நண்பர் போலவும் பழக வேண்டும் என்று ஆசை இருக்கிறது . ஆனால், காளிதாசால் பிரபுவுடன் சகஜமாக பேசிப் பழக முடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது. இதை அறியும் பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகனுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க நினைத்து பிரபுவையும் காளிதாசையும் தன் தனித்தீவு வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு சாமியாராக வரும் கமல், இருவருக்கும் உள்ள பிரச்சனைகளை கேட்டறிகிறார். அதன் பின் இவர்களது பிரச்சினைக்கு வித்தியாசமாக தீர்வு காண முயலும் சாமியார் கமல் தனது ஞானதிருஷ்டியின் படி அவர்களது உடம்பு உருவ அமைப்பை அப்படியே விட்டுவிட்டு அவர்களுக்குள் இருக்கும் சிந்தனையை மாற்றிவிடுகிறார் .

அதாகப்பட்டது அப்பா பிரபு வின் உடம்பில் பிள்ளை காளிதாசின் இளமையான சிந்தனை, எண்ணம், செயல்பாடு ஆகியவை இருக்குமாறும், காளிதாசின் உடம்பில் பிரபுவின் வெகுளித்தனம், பொறுப்பான சிந்தனை ஆகியவை ஏற்படுமாறும் மாற்றிவிடுகிறார். இதன்பின் பிரபு, காளிதாஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் ஆஷ்னா சவேரி, பூஜா குமார் ஆகியோருடனான இருவரது காதல் கலாட்டக்களையும் கலக்கலாகவும், கலர்புல்லாகவும் காமெடி கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்… மீன் குழும்பும் மண்பானையும் திரைப்படத்தில்…

காமெடி என்ற பெயரில் அப்பா பிரபுவிற்குள் மகன்காளிதாஸும் , மகன்காளிதாஸுக்குள், அப்பா பிரபுவும் புகுந்து கொண்டு அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் எம்.எஸ்.பாஸ்கர் – தளபதி தினேஷ் எபிசோட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சுத்த போர்!

படத்திற்கு பெரிய பலம் அப்பா நாயகர் பிரபு. மிகவும் பொறுப்பானவராகவும், காமெடியாகவும் படம் முழுக்கநடித்திருக்கிறார் முதற்பாதியில் மகன் மீது வைத்துள்ள பாசம், வெகுளித்தனம் உள்ளிட்டவைகளால் மொத்த படத்தையும் தன் தோள் மீது தூக்கி சுமக்கிறார். பிற்பாதியில் இளைஞன் எண்ணத்துடன்எனர்ஜியாகநடித்திருக்கிறார். இவருடைய இளமையானநடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் பிரபு சார்.

முதற்பாதியில் கார் ரேஸூம், காளிதாசின் நடிப்பும் பரவாயில்லை என்றாலும், பிற்பாதியில் அதற்கு நேர்மாறாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாவ் , கீப் இட் அப் காளிதாஸ்.

காளிதாஸின்நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரிபடம் முழுக்க பக்கா கிளாமராக வருகிறார். அம்மணி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். கேங் லீமாவாக நடித்திருக்கும் பூஜா குமார் செம செக்ஸி லுக்கில் பிரபுவை பிக்-அப் செய்ய சுற்றும் காட்சிகள் ரசனை.
சாமியாராக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கெஸ்ட் ரோலில் வந்தாலும் மனதில் பதிகிறார் கமல். “சாமி, நீங்க உலக நாயகன் கமல் மாதிரியே இருக்கீங்களே”, என பிரபு கேட்பதற்கு, “என் பாத்ரூம்ல ஒரு நா அவன் குளிச்சிட்டான் அதான்” என டைம்மிங்காக டயலாக் அடிக்கும் கமல் தியேட்டரில் கூடுதல் சிரிப்பை கிளப்புகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் அவர்களுக்கே உரிய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள். காமெடி சிவாஜி, இளவரசு, ஓய்ஜி மகேந்திரா உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

லஷ்மனின் ஒளிப்பதிவில் மலேசியா மேலும், அழகாக ஜொலிக்கிறது. இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.

மீன் குழம்பும் மண் பானையும்’ எனும் டைட்டில் மற்றும் மலேசியா பேக் – ரவுண்ட்.
பலவீனம் : நம்ப முடியாத லாஜிக் இல்லாத கதை.

வித்தியாசமான கதையை தேர்வு செய்து, முழுக்க, முழுக்க மலேசியாவிலேயே மொத்த
படமும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அமுதேஸ்வர். முதற்பாதியை விட பிற்பாதியில் கொஞ்சம் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார். சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.
‘மீன் குழம்பும் மண் பானையும்” ஒழுகும் சட்டி பானை என்றாலும் ஒரு மாதிரி இந்தக் குழம்பை சுவைக்கலாம், ரசிக்கலாம்!

Leave a Reply