shadow

matrimonial sitesதற்போது நாட்டில் திருமண புரோக்கர் முறை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏராளமான திருமண இணையதளங்கள் உருவாகியுள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்படி இன்மேல் மணமகள் அல்லது மணமகன் தேடி தங்கள் பெயரை பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை இல்லாமல் பதிவு செய்ய முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் போலியாக தங்கள் பெயர் மற்றும் விபரங்களை திருமண இணையதளங்களில் பதிவு செய்து பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கவே இத்தகைய புதிய உத்தரவு என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் இன்னும் அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டை கொடுத்து முடிக்காத நிலையில் இந்த உத்தரவு பலரை சிக்கலில் உண்டாக்கும்.  ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தங்கள் புகைப்படத்துடன் தான் பெயரை பதிவு செய்ய முடியும். மேலும் இணையதளத்தில் பல்வேறு கணக்குகள் வைத்து பெண் அல்லது மாப்பிள்ளை தேட முடியாது.

இது குறித்து பாரத்மேட்ரிமோனி. காமின் சிஇஓ முருகவேல் கூறுகையில், ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது சிக்கலாகிவிடும். பலர் தங்களின் பிரைவசியை மதிப்பவர்கள். சிலரிடம் அடையாள அட்டை கூட இல்லை என்றார்.

ஷாதி.காம் சிஇஓ அனுபம் மிட்டல் கூறுகையில், திருமண இணையதளங்களில் பெயரை பதிவு செய்ய ஆதார் அட்டை தேவை என்று அரசு கூறினால் அதை ஏற்கத் தான் வேண்டும். ஆனால் எத்தனை பேரிடம் ஆதார் அட்டை உள்ளது. உத்தரவிடும் முன்பு அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளார்களா என்பதை அரசு சரிபார்க்க வேண்டும் என்றார்

Leave a Reply