shadow

draupatiகடவுளின் சித்தப்படிதான் அனைத்தும் நடக்கும் என்பதையும் மனிதனாக பிறந்த அனைவருக்கும் சகிப்புத்தன்மை அவசியம் என்பதற்கும் மகாபாரதத்தில் வரும் காட்சியை அனைவரும் கூறுவர். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்.

மகாபாரதத்தில் திரவுபதியின் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்த போது, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் கொன்று விட்டான். அவள் மிகுந்த துயரத்தில் இருந்தாள். மகன்களைக் கொன்ற அஸ்வத்தாமனை, அர்ஜுனன் இழுத்து வந்து திரவுபதி முன் நிறுத்தினான்.அவள் அஸ்வத்தாமனை சபிக்கவில்லை. மாறாக, அவன் கால்களில் விழுந்து, அஸ்வத்தாமா! நீ இப்படி செய்யலாமா? உன் தந்தையிடம் தானே, என் கணவன்மார் மாணவர்களாக இருந்தனர்! என் குழந்தைகள் உனக்கு என்ன துரோகம் செய்தனர்! ஆயுதமின்றி உறங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொல்லலாமா? என்றாள்.

அப்போது அங்கு நின்ற பீமனுக்கு கோபம் வந்து விட்டது. நம் பிள்ளைகளைக் கொன்றவனின் காலில் விழுந்து கெஞ்சுகிறாளே இந்தப் பாவி! பிள்ளைகளை இழந்த இவளது மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது, என்று சீறினான்.அவனைச் சமாதானம் செய்த திரவுபதி, அர்ஜுனனிடம், அன்பரே! குருவின் மகனைக் கொல்வது பெரும் பாவம். பயம் கொண்டவன், உறங்குகிறவன், போதையில் இருப்பவன், சரண் அடைந்தவன், பெண் ஆகியோரைக் கொல்வது தர்மம் கிடையாது, என்றாள்.ஆனால், அர்ஜுனன் அஸ்வத்தாமனைக் கொன்றே தீருவது என்ற சபதத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான்.

உடனே அவள், நான் ஒரு தாய். என் பிள்ளைகளை இழந்து தவிப்பது போல, இந்த அஸ்வத்தாமனின் தாயும் தவிக்கக்கூடாது. ஒருவேளை, இவனைக் கொல்வதனால், என் பிள்ளைகள் திரும்ப வந்து விடுவார்களா! என கேட்டாள். பிறகு, அஸ்வத்தாமனை மொட்டைஅடித்து அனுப்பிவிடும்படி சொன்னாள். இதன் மூலம், எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதும், சகிப்புத்தன்மை எல்லாருக்கும் முக்கியம் என்பதும் தெரிய வருகிறது

Leave a Reply