ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்த பின்னர் முதல்முறையாக பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமிழக சட்டமன்றம் கூடியது. தமிழக புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பன்னீர்செல்வம் நிதியமைச்சராக இருந்தபோது உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே அமர்ந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கை காலியாகவே இருந்தது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வருகை தந்தார். ஆனால் அவரை புகைப்படம் எடுக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சட்டசபை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு சட்டமன்ற வளாகத்தில் இருந்து கருணாநிதி புறப்பட்டார். கருணாநிதிக்கு தேவையான இருக்கை வசதி செய்து தரவில்லை என்பதால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவரது தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.