இரண்டு பிஞ்சு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுமியின் மரணம்.
அமெரிக்காவை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவருக்கு மூளையில் கேன்சர் இருந்தது. இந்த சிறுமியின் கேன்சர் முற்றி, சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் மரணம் அடைந்த ஒருசில மணி நேரத்திற்குள் அவருடைய பெற்றோரின் அனுமதியுடன் அவருடைய கல்லீரல் மற்றும் குடல் ஆகியவற்றை எடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த வேறு இரு சிறுவர்களுக்கு பொருத்தப்பட்டது. இதனால் அந்த இரண்டு சிறுவர்களும் குணம் அடைந்தனர். இரண்டு சிறுவர்களை தனது மரணத்தின் மூலம் உயிர் பிழைக்க வைத்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த நெப்ராஸ்கா என்ற பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒலிவியா ஸ்வட்பெர்க் என்ற சிறுமிக்கு மூளையின் புற்றுநோய் ஏற்பட்டது. இவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியபோதிலும், அவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். உடனே அவருடைய பெற்றோர்களிடம் அனுமதி பெற்று, சிறுமியின் குடல் மற்றும் கல்லீரல் ஆகிய இரண்டையும் எடுத்து அதே பகுதியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லூகஸ் கோயில்லர் என்ற சிறுவனுக்கு கல்லீரலையும், ஆங்கிலோ ஜியோர்னோ என்ற நான்கு வயது சிறுவனுக்கு குடலும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரு சிறுவர்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிறுமி ஒலிவியாவின் தாயார் கூறியபோது தனது மகள் மரணம் அடையவில்லை என்றும், இரண்டு மகன்களாக இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஒலிவியாவின் மரணம் பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.