இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் இருந்து வருகிறது. மேலும் தலைநகர் டில்லியில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு வெப்ப நிலை மிகவும் குறைந்துள்ளது.
காஷ்மீரில் காலை நேரத்தில் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாகவும், . இரவு வேளையில் மைனஸ் 5.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை நிலவி வருகிறது. கார்கில் பகுதியில் மைனஸ் 15.2 டிகிரி செல்சியசாக இருந்தது. கடும் குளிர் காரணமாக விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 55 விமான சேவைகள் தாமதமாகி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து தலைநகர் டில்லிக்கு வந்த 3 விமானங்கள் தரையிறங்க முடியாததால் வேறு சில ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் காரணமாக நேற்று ஒரே நாளில் இங்கு 21 பேர் வரை பரிதாபமாக உயிர் இழந்தனர். இவர்களையும் சேர்த்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து உள்ளது. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்திலும் வெப்ப நிலை 1 டிகிரியாக உள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.