மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மாநில அரசு அதிரடியாக சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும் அனுமதி கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு பல்வேறு தரப்பினர் இந்த புதிய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் ஒன்றை நேற்று நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் நேற்று மாட்டிறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து கண்டன போராட்டம் நடத்தினார்கள். அப்போது சமைக்கப்பட்ட மாட்டிறைச்சிகளை சாப்பிட்டபடியே மகாராஷ்ட்ரா அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
முன்னதாக மகாராஷ்ட்ரா அரசின் மேற்கூறிய தடை உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் அதேபோன்ற தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுத்திருந்தார்.
இதனை குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், தமிழகத்தில் அத்தகையதொரு தடை வந்துவிடக்கூடாது என்பதை தடுக்கும் நோக்கத்திலும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.