ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத் உயிருக்கு சக கைதிகளால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஜார்கண்ட் சிறப்பு போலீசார் எச்சரித்துள்ளனர். உளவுத்துறை அதிகாரிகளும் லாலு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாலுவை சந்திக்க வரும் அனைவரையும் முழுமையாக பரிசோதித்த பிறகு அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் லாலுவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே சிறையில் லாலுவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், சிறைக்குள் லாலு அரசியல் ஆலோசனைகள் நடத்த தடை விதிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply