shadow

kushbooஅரசியலில் நுழையும் முன்பே அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் நடிகை குஷ்பு, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதும் ருத்திராட்ச மாலையில் நடிகை குஷ்பு தாலி கோர்த்து அணிந்துள்ள புகைப்படம் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளதாகவும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து எழுந்துள்ள புகாரையடுத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் பாலா என்பவர் நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஒன்றில், “பிரபல வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்ச கொட்டை கோர்த்து அணிந்திருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது. இது இந்து மதத்திற்கு எதிரானது. மேலும் இந்து மதத்தை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது. எனவே இந்து மதத்தை இழிவு படுத்திய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த பாலாவிடம் கேட்ட போது, “இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள், இந்து மத தலைவர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் இது தவறான செயல் என தெரிவித்தனர். அதன் பின்னர்தான் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply