shadow

வெளிநாட்டில் இருந்து பிரதமர் மோடியை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும். குஷ்பு

kushbooவெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணத்தை மீட்டு கொண்டு வருவேன்’ என்று கூறி பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடியை வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வரவேண்டும் என ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இதேபோன்ற ஒரு கருத்தை பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முருங்கப்பாக்கம் என்ற பகுதியில்  நேற்று காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, ”’புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டவர். அவரை காங்கிரஸ் கட்சி அறிமுகம் செய்யாவிட்டால், அவர் வெறும் சாமியாகத்தான் இருந்திருப்பார். அப்பேற்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ரங்கசாமி தற்போது துரோகம் செய்து வருகிறார்.

அவரது கட்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இவர் என்ன காந்தியுடன் தண்டி யாத்திரைக்கு சென்றாரா? அல்லது சுதந்திர போராட்ட வீரரா? காந்தி பெயரில்கூட காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்த ரங்கசாமி எப்படி தனது பெயரை காங்கிரஸ் கட்சிக்கு வைக்கலாம்.

ரங்கசாமி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த எந்த திட்டத்தையும் அவர் இதுவரை நிறைவேற்றவில்லை. இலவச மிக்சி, கிரைண்டர், இலவச அரிசி உள்ளிட்ட எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

புதுச்சேரி மக்களை அவர் ஏமாற்றி வருகிறார். ஆனால், புதுச்சேரி மக்கள் இனியும் ரங்கசாமியை நம்ப மாட்டார்கள். வரும் 2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தேர்வு செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சி கஷ்டத்தில் இருந்தது. அப்போதுதான் நான் இந்த கட்சியில் இணைந்தேன் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறானது. காங்கிரஸ் ஒருபோதும் கஷ்டத்தில் இருந்தது இல்லை. அதற்கு மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்போம் என்றார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி தான் வெளிநாட்டிலேயே இருக்கிறார். முதலில் அவரை மீடு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்”

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

Leave a Reply