ருத்ராட்ச மாலையில் தாலியை கோர்த்து அணிந்து இந்துக்களின் புனிதமான பொருளை நடிகை குஷ்பு அவமதித்துவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கும்பகோணத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா என்பவர் சமீபத்தில் நடிகை குஷ்பு மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை அணிந்து இருந்ததாக ஒரு வார இதழில் வந்த படத்தை பார்த்து தான் அதிருப்தி அடைந்ததாகவும், சினவடியார்களும் சிவபக்தர்களும் அணியும் புனிதமான ருத்திராட்சமலையை அணிந்த குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
“ருத்ராட்ச மாலை என்பது சிவனடியார்களும், சிவபக்தர்களும் அணிவது தான் வழக்கம். ருத்ராட்ச மாலையில் ஒருமுகம் முதல் 24 முகம் வரை மாலைகள் உள்ளன. இதில் குஷ்பு அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலையில் 3 முகம் உள்ளது. 3 முகம் என்பது சிவசக்தி வழிபாடு உள்ளவர்கள் மட்டுமே அணியக்கூடியது. அதை அணிபவர்கள் ஆகம விதி, இந்து சமய மரபுகளைக் கடைபிடிக்கவேண்டும். ஆனால் குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தைக் கோர்த்திருப்பது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது. அவர் இந்து சமயத்தின் மீதும், இந்து கடவுளின் மீதும், இந்து சமய சின்னங்களைக் களங்கப்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எனவே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295ன் படி தண்டிக்கக்கூடிய குற்றம் செய்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் சரவணபவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுமீது தீர்ப்பு அளித்த நீதிபதி, “மனுதாரர் பாலா நேரில் பார்த்த சாட்சிகளை இந்த மனுவில் குறிப்பிடவில்லை. வாரப் பத்திரிகையைப் பார்த்து அதில் அதிருப்தி அடைந்ததாக கூறியுள்ளார். இந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.