நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் கோவைக்காயைப் போல அந்த கொடியில் உள்ள இலைகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வேலிகளிலும், தோட்டங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து உள்ள இந்த கீரை இனிப்பு, கசப்பு என இரண்டு வகையான ருசிகளைக் கொண்டது. இதன் காய், பழம், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் பழங்கள் சிவப்பு நிறமுடையவை, இவற்றை உண்டால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது, நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்
கோவைக்காய் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு, சீரகம், இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து உண்ண வேண்டும். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று உண்டால் வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

சரும நோய்க்கு மருந்தாகும்
கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும். கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும். இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும். கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும். கோவை இலையை அரைத்து சாதாரண புண்ணுக்கும், அம்மையினால் உண்டான இரணங்களுக்கும் மேலே பூச புண் ஆறும்.

Leave a Reply