shadow

‘கிஸ் ஆப் லவ்’ இயக்க போராளி மனைவியுடன் விபச்சார வழக்கில் கைது

kiss of loveகேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது இடங்களில் முத்தம் கொடுக்க தடை விதித்தபோது கலாச்சாரக் கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் ‘அன்பு முத்தம்’ (கிஸ் ஆஃப் லவ்) என்ற போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய நடத்திய ராகுல் பசுபாலன் என்பவர் தனது மனைவியுடன் இணைந்து ஆன்லைனில் பாலியல் தொழில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஆன்லைன் பாலியல் தொழில் அதிகம் நடப்பதாக வந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து கடந்த மாதம் ஆபரேஷன் பிக் டாடி (Operation Big Daddy) என்ற பாலியல் குற்றத் தடுப்பு நடவடிக்கையை கேரள போலீஸார் துவங்கினர்.

இதன்படி இணையதளம் மூலமாக பாலியல் தொழில் செய்யப்படுவது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. போலீஸார் சிலரே தங்களை செல்வந்தர்கள் போல் அடையாளப்படுத்திக் கொண்டு, சில குறிப்பிட்ட அம்சங்களுடைய பெண்கள் தங்களுக்குத் தேவை என ஆன்லைனில் பதிவு செய்தனர். போலீஸார் விரித்த வலையில் மிகக் கச்சிதமாக சில இடைத்தரகர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டிருப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. அவர்கள் 4 பேரையும் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதேபோல், ராகுல் பசுபாலனும், அவரது மனைவி ரேஷ்மி நாயரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலை போலீஸார் இன்னும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply