பைக்கில் சென்ற தம்பதியை எட்டி உதைத்த போலீஸ்: கர்ப்பிணி பலியால் பதட்டம்
திருச்சி அருகே திருவெறும்பூரில் என்ற பகுதியில் தம்பதி சென்ற பைக்கை காவல் ஆய்வாளர் ஒருவர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தின் காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தம்பதியினர் பைக்கில் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போடாததால் பணியில் இருந்த காமராஜ் என்ற ஆய்வாளர் அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த தம்பதியினர் ஆய்வாளரை கவனிக்காமல் நிற்காமல் சென்றனர்.
இதையடுத்து, இன்னொரு பைக்கில் தம்பதியை விரட்டி சென்ற ஆய்வாளர் காமராஜ் தம்பதியினர் சென்ற பைக்கை எட்டி உதைத்துள்ளார். இதில் வாகனம் நிலைகுலைந்து கர்ப்பிணி பெண் உஷா சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் உஷா மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது கணவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பிணி மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டநிலை உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.