சட்டசபைக்கு வந்த கருணாநிதி. கையெழுத்திட்ட பின் உடனே திரும்பினார்
திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று தமிழக சட்டமன்றத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வருகை தந்தார். அவரை எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.
சட்டமன்ற லாபிக்கு வந்த அவர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி கிளம்பி சென்றார்.
சட்டசபையில் இன்று கைத்தறி, துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில் இந்த விவாதத்தில் திமுக தலைவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவாதத்தில் கலந்து கொள்ளாமல் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு கிளம்பிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.