வெள்ள பாதிப்பை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதற்கு வெட்கப்படுகிறேன். கமல்ஹாசன்
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.
இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாரித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன் ஆனால் அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை,பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்” என்றும் அதில் தெரிவித்துள்ளார்
English Summary: Kamalhassan statement about Chennai floods
Leave a Reply
You must be logged in to post a comment.