shadow

இது வெறும் படமல்ல சமூதாயத்துக்கு ஒரு பாடம். ‘ஜோக்கர்’ குறித்து கி.வீரமணி

jokerகடந்த வாரம் வெளியான ஜோக்கர்’ படத்தை ஏற்கனவே திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள் பார்த்துவிட்டு இயக்குனர் ராஜூமுருகனை வாழ்த்தியுள்ள நிலையில் தற்போது மேலும் சில அரசியல்வாதிகள் இந்த படத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: ஆட்சியாளர்களால் சமூகத்தில் ஏற்ப்படக்கூடிய அவலங்களை சரியாக படம்பிடித்து காட்டி இந்த அவலங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என இந்த படம் மூலமாக கலை இலக்கியம் மூலமாக மக்களுக்கு சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என நாம் கணிக்க முடியாத அளவுக்கு படம் நன்றாக வந்துள்ளது. ஒரே விதத்தில் திரைப்படங்கள் வரக்கூடிய இன்றைய சூழலில் இத்தககைய சரியான கருத்தை சொல்ல கூடிய படம் என்பது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கூரியது. இந்த நாட்டு மக்களை நிச்சயமாக தட்டி எழுப்பும் அவர்களை சுய சிந்தனை உள்ள மனிதர்களாக மாற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்களை பற்றி அம்பலபடுத்தும் ஒரு அற்புதமான திரைப்படம். இதை ஆக்கி இருக்க கூடிய அனைவருக்கும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். இந்த படம் வெற்றியடையட்டும் உலகம் முழுவதும் திரையிடப்படட்டும். இந்த நாடு எப்படி இருக்கிறது என்பதை இந்த உலகம் பார்க்கட்டும்.

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்ல கண்ணு: இந்திய நாட்டினுடைய எல்லா துயரத்தையும் , மக்கள் படும் துயரத்தையும் அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர். வெறும் படமாக அல்லாமல் பார்க்கிறவர்கள் அந்த துயரத்தை உணரவைத்து சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு படைப்பாக இருக்கிறது. இது போன்ற படங்கள் மக்களை சிந்திக்க தூண்டும். இதை போன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும். இப்படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

மே 17 இயக்க தலைவர் திரு முருகன்: சிறந்த அரசியல் படம் ஒன்று வந்திருக்கிறது இது கல்வியில் இருந்து நாம் வாழும் வாழ்க்கை முறை வரை எல்லாவற்றையும் விரிவாக பேசியுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் என்பது பலதளங்களில் பேசி ரொம்ப காலம் ஆகின்றது. குறைந்த பட்சம் 40 வருடங்களில் தீவிர அரசியல் விவாதம் என்பது இங்கு இல்லவே இல்லை. இன்னும் சொல்வதென்றால் திரைப்படங்களில் இதை போன்ற ஒரு போக்கு நின்று போய் ரொம்ப காலம் ஆகின்றது. 7வது மனிதன் போன்ற படமெல்லாம் வந்து ரொம்ப காலம் ஆக கூடிய ஒரு சமயத்தில் அரசியல் விவாதம் என்பது ஒரு திரைப்படத்தின் மூலம் வருவது நன்றாக இருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் அரசியலும் , திரைப்படமும் முக்கியமான இடம் பிடித்துள்ள இரண்டு போக்குகள். திரைப்படங்களில் அரசியல் இல்லாத ஒரு குறையை இதை போன்ற சில படங்கள் வெளிவந்து நீக்கிகொண்டு இருக்கிறது. ஜோக்கர் படத்தின் வருகை ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். இப்படம் அரசியல் தளத்தில் செயல்படக்கூடிய ,ஈடுபாடுடையை சிலருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. திரைப்படத்தின் மூலம் அரசியலை கொண்டு வர வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது உற்சாகத்தை அளிக்கும் ஒரு படமாக இருக்கும். எங்களுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: திரைப்படங்களுக்கு அதிகமாக செல்லாத ஒருவன் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பி ஜோக்கர் குழுவின் அன்பு அழைப்பை ஏற்று பார்த்த நேரத்தில் இது போன்ற ஒரு சமூதாய யதார்த்தத்தை அப்படியே சமூதாய எக்ஸ்ரே வாக எடுத்து காட்டி மிகப்பெரிய ஒரு அறிவு புரட்சியை அமைதி புரட்சியை , பசுமை புரட்சியை இந்த திரைப்படம் ஒரு காவியமாக ஆக்கி இருக்கிறது. இது வெறும் படமல்ல சமூதாயத்துக்கும் பல்வேறு நிலைகளில் இருக்க கூடியவர்களுக்கும் ஒரு பாடம். இந்த பாடத்தை சரியாக படித்தால் நிச்சயமாக புதியதொரு சமூதாயத்தை தோற்றுவிக்கலாம். அதற்காக சிறப்பாக இதை எழுத்து இயக்கம் செய்த இளைஞர் ராஜு முருகன் மிகப்பெரிய அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். தனியே இப்படத்திற்கு ஒரு பாராட்டு விழா எங்களால் நடத்தப்படும்.

Leave a Reply