ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து, ஆளுநர் என்.என்.வோராவிடம் தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.) கடிதம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டர் சமூகவலைதளப் பக்கத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா, ”மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, ஆளுநர் வோராவுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் முன்பாக எங்களது கட்சியை கலந்தாலோசிக்க வேண்டும் என ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளோம்” என கூறி உள்ளார்.
இதனிடையே, ஆளுநர் வோராவுக்கு அனுப்பியுள்ள கடித விவரங்களை என்.சி. சார்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்ற கட்சியாகத் திகழும் பி.டி.பி. ஆட்சியமைக்க என்.சி. ஆதரவு அளிக்கிறது. ஆட்சியமைப்பது தொடர்பாக பி.டி.பி. எந்த முடிவும் எடுக்காததால், மாநில அரசியலில் குழப்பம் நிலவிய காரணத்தை வைத்து ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, மக்கள் வாக்களித்தபோதிலும் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் எதிர்காலம் குறித்தும், மாநிலத்தில் அரசமைப்பது தொடர்பாகவும் முடிவெடுப்பதற்கு முன்பு எங்கள் கட்சித் தலைமையை அழைத்து நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.