shadow

bihar new partyசமீபத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி நேற்று புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் தனது கட்சிக்கு “ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) என்ற பெயரை வைத்துள்ளார். இந்த கட்சியில் ஜிதன்ராம் மாஞ்சியின் ஆதரவு எம்.எல்.ஏக்களும், சில முன்னாள் அமைச்சர்களும் இணைந்துள்ளனர்.

புதிய கட்சியை தொடங்கிய பின்னர் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிதன்ராம் மாஞ்சி, “‘ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஒரே நோக்கம் நிதீஷ்குமாரை பதவியில் இருந்து இறக்குவதுதான். எங்கள் கட்சியின் ஒரே எதிரி நிதிஷ்குமார்தான்.

இந்த கட்சியின் பிகார் மாநிலத் தலைவராக முன்னாள் அமைச்சர் சகுனி சௌதரி இருப்பார். எங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் விரைவில் பதிவு செய்ய இருக்கின்றோம். எங்கள் கட்சி வருகிற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். நிதீஷ் குமாருடன் தொடர்புடைய எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்’ என்று கூறினார்.

பீகாரில் ஜிதன்ராம் மாஞ்சி தொடங்கியுள்ள புதிய கட்சியால் வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது என்றும், இது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Leave a Reply