சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா முதல்முறையாக 7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்தார். இன்று பிற்பகல் சரியாக 1.28 மணிக்கு ஜெயலலிதா தனது காரில் ஆளுநரை பார்க்க போயஸ் கார்டனில் இருந்து கிளம்பினார். ஜெயலலிதாவின் காரை தொடர்ந்து சுமார் 20 வாகனங்கள் பின் தொடர்ந்து சென்றன.
கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவிலில் காரில் இருந்தபடியே விநாயகரை வழிபட்ட ஜெயலலிதா பின்னர் ஆளுனர் மாளிகையை நோக்கி சென்றார். ஆளுனர் ரோசய்யாவிடம் பரஸ்பர நலன்களை விசாரித்து முடித்த பின்னர், தன்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதம் மற்றும் தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார்.
இதையடுத்து ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.