shadow

jayaசொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீனை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. மேலும், அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.

இதைத் தொடர்ந்து 4 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் டிசம்பர் 18ஆம் தேதி வரை (இன்று) இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டதோடு, மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், வழக்கில் சிறப்பு அமர்வை அமைத்து தினமும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply