தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 ஆம் தேதி அளிக்கப்படும் என கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்
ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
முன்னதாக நீதிமன்ற பதிவாளர் கர்நாடக அரசுடனும், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியுடனும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வரும் அதிமுகவினரை கட்டுப்படுத்துவது, போதிய பாதுகாப்பு வழங்குவது, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.