ஜப்பான் நாட்டின் ஒகினாவா நகரை இன்று காலை, மணிக்கு 155 மைல் வேகத்தில் புயல் தாக்கியதால் அந்த நகரமே அலங்கோலமாகி உள்ளது. இந்த புயல் காரணமாக ஒகினாவா நகரில் வாழும் 500,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற ஜப்பான் அரசு தீவிர முயற்சி செய்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜப்பானில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த புயலுக்கு நியாகுரி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 108 மைல்கள் முதல் 155 மைல்கள் வரையிலான வேகத்தில் பயங்கர புயல்காற்று அடித்தது. இதுவரை வந்த தகவலின்படி ஒரு பெண் மீது மரம் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு மீனவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜப்பானின் மேலும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என வானிலை எச்சரித்துள்ளது. ஜப்பானின் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஜப்பானின் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.