ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் செய்தியாக இன்று ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்த புதிய அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று காலை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே இருக்கும் அறிவிக்கையை மீற முடியாது என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டுக்கான அறிவிக்கையில் காளை வதை பற்றி கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று வாதம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதிக்கலாம். ஜல்லிக்கட்டு ஸ்பெயினில் நடைபெறுவது போன்று காளை வதை சண்டையல்ல என்று ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக வாதாடியது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.