shadow

 isaiகொடிகட்டிப் பறந்த ஒரு இசை மேதை தன் தோல்வியால் கொள்ளும் வேதனையும் தன் மாணவனின் எழுச்சியால் கொள்ளும் பொறாமையும் ஏற்படுத்தும் விளைவுகளே ‘இசை’.

தமிழ்த் திரையின் முன்னணி இசை அமைப் பாளர் வெற்றிச்செல்வனின் (சத்யராஜ்) உதவி யாளர் ஏ.கே. சிவா (எஸ்.ஜே. சூர்யா). சத்யராஜின் அகங்காரம் அதிகரிக்கும்போது அவரால் பாதிக்கப்படும் ஒரு இயக்குநர், சத்யராஜின் உதவியாளர் சூர்யாவை இசையமைப்பாளராக ஆக்குகிறார்.

சூர்யாவின் புதுமையான இசை விரைவில் அவருக்குப் பெரும்புகழை ஏற்படுத்தித் தருகிறது. சத்யராஜுக்கு வேலையோ அங்கீகாரமோ இல்லாமல் போகிறது. தன் மாணவனை வீழ்த்த அவர் குரூரமான வியூகம் வகுக்கிறார். இது தான் கதை.

மூத்த, இளம் கலைஞர்களுக்குள் உருவாகும் சிக்கலை எடுத்த எடுப்பிலேயே அழுத்தமாகக் காட்டிப் படத்துக்கான மனநிலையை உருவாக்கி விடுகிறார். புறக் கணிப்பின் வேதனையில் ஒருவரும், வெற்றியின் களிப்பில் இன்னொருவருமாக இரண்டு தனி நபர்களின் வாழ்க்கையைப் பின்தொடரும் திரைக்கதை இரு இழைகளிலும் பொருத்தமான தொனியைக் கொண்டு வந்து விடுகிறது. ஒளி அமைப்பு, பின்னணி இசை ஆகியவற்றின் மூலம் இந்த வித்தியாசம் நன்கு உணர்த்தப் படுகிறது.

எனினும் அலுப்பூட்டும் அளவுக்கு வேதனையும் வெற்றியும் மாறி மாறிக் காட்டப்படும் நேரத்தில் மூத்த கலைஞரின் வன்மம் நிறைந்த சதித்திட்டம் தொடங்க, படம் சூடுபிடிக்கிறது. ஆனால் இந்தச் சதித் திட்டத்தின் கிளைகள் நம்பகத்தன்மையின் எல்லைகளை மீறி அளவுக்கதிகமாக நீளும்போது சோர்வு ஏற்படுகிறது.

சின்னச்சின்ன விஷயங்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார் சூர்யா. வேலைக்காரர்கள் நடந்து வரும் தோரணையில் இருந்து அவர்கள் நடந்துகொள்ளும் விதம் சத்யராஜுக்கு எப்படித் தெரிகின்றன என்பதைக் காட்டிய விதம் நன்றாக உள்ளது. சத்யராஜ் கதாபாத்திரம் நன்றாக வார்க்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்திலிருந்து அவர் வில்லனாகவே காட்டப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

பொறாமை, வேதனை, வன்மம் ஆகியவற்றை நக்கல் கலந்து வெளிப்படுத்தும் விதத்தில் சத்யராஜ் கைத்தட்டலை அள்ளுகிறார். மனநிலை பாதிக்கப்பட்ட பிறகான காட்சிகளில் எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகராக வெளிப்படுகிறார். சாவித்திரி, சூர்யா பட நாயகிகளுக்குத் தேவையான சகல இலக்கணங்களும் பொருந்தியவர். போலி பவ்வியம் காட்டும் கஞ்சா கருப்பின் நடிப்பும் அருமை.

சூர்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன என்றாலும் இசை குறித்த படம் என்பதற்கேற்ப இல்லை. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

வசனங்கள் பல இடங்களில் பளிச்சென்று இருக்கின்றன. ‘கோடிக்கணக்கான சொத்து இருக்கு, ஆனா பிச்சை எடுத்து சாப்பிடற மாதிரி இருக்கு’ என்பது ஒரு உதாரணம். இசை எங்கிருந்து வருகிறது என்பது பற்றிய உரையாடலும் அருமை.

படத்தில் தர்க்கப்பிழைகள் ஏராளம். தந்திரமாக வலை விரித்து ஒருவரது ஆளுமையைச் சிதைக்க முடியும் என்பதைத் திரைக்கதை நிறுவுகிறது. ஆனால் எந்த அளவுக்கு அந்த வலையை விரிவுபடுத்த முடியும் என்பதில் அறிவுக்குப் பொருந்தும் எந்தக் காரணத்தையும் காண முடியவில்லை. ஒரு தனிநபரை ஏமாற்ற ஒரு சின்ன கிராமத்தையே உருவாக்கும் முயற்சி எல்லாம் ஜீரணிக்கவே முடியாதவை. சதித்திட்டம் தொடங்குவதற்கு முன்பே நடந்துவிட்ட காட்சிகளையும் திரைக்கதை தன் வசதிக்கு ஏற்பச் சதிக்குள் சேர்த்துக்கொள்கிறது. சதி முன்பே தொடங்கிவிட்டது என்றால் அதைக் காட்டுவதற்கான காரணம் எதுவும் வலுவாக இல்லை.

ஆனால் கடைசிக் காட்சியில் சூர்யா தரும் ‘திருப்பம்’ எந்தக் கேள்வியையும் கேட்க விடாமல் செய்கிறது. புறக்கணிப்பின் வேதனை, அங்கீகாரம் ஆகியவை குறித்து திரைக்கதை எழுப்பும் கேள்விகளையும் புறக்கணித்துவிட வேண்டியதுதான். அதைத்தான் சூர்யா எதிர்பார்க்கிறாரா?

காதல் வளரும் கட்டம் மிகவும் விரிவாகக் காட்டப்படுகிறது. இதில் சூர்யா வின் ‘முத்திரைகள்’ தூக்கலாக இருப்பதைத் திரையரங்கில் இளைஞர்கள் ரசிக்கிறார்கள் என்றாலும் காதலைப் பெறுவதற்காக அவர் செய்யும் சேட்டைகள் பொறுமையைச் சோதிக்கின்றன. சூர்யாவின் மனநிலை பாதிக்கப் படுவதைக் காட்டும் காட்சிகளும் தேவைக்கதிகமாக நீள்கின்றன. இவற்றைக் குறைத்திருந்தால்  சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும்

Leave a Reply