கேள்வி : சாமிக்கு நைவேத்யம் செய்கிறோம் என்று, உணவுப் பொருட்களை இறைவனுக்குக் கொடுக்கிறோமே – அவர் அதைச் சாப்பிடுவாரா?
பதில் …கண்ணப்ப நாயனார் போன்றவர்கள் கொடுத்தால் சாப்பிடுவார். அவர் இறைவனுக்கு இறைச்சியையே படைத்தாரே!
கேள்வி : எல்லோரும் கண்ணப்ப நாயனார் இல்லையே? அப்படியிருக்க, சாதாரண மனிதர்கள் இறைவனுக்கு உணவு அளிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது…?
பதில் : எல்லோரும், இறைவனுக்கு உணவு அளிப்பதில்லை. நைவேத்யம் என்பது வழக்கில் வந்த சொல். சரியான சொல் – நிவேதனம். அதாவது ‘காண்பிப்பது’. இன்று, நம் வீட்டில் என்ன உணவு செய்திருக்கிறோம் என்று இறைவனுக்குக் காட்டுகிறோம்.
‘உன் கருணையினால் கிடைத்த உணவு இது. அந்த உன் கருணை நீடித்துக் கிட்ட பிரார்த்திக்கிறோம்’ என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். அதுதான் நிவேதனம்.‘இந்தா, சாப்பிடு!’ என்று இறைவனுக்கு நாம் உணவு படைப்பதில்லை. அவன் கருணையினால் கிடைத்ததை, அவனுக்குக் காண்பித்து, அவன் உத்திரவுடன் அதை நாம் சாப்பிடுகிறோம்.
இதை நன்றாக விளக்குகிற மாதிரி, விவரம் அறிந்த வைஷ்ணவர்களிடையே ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்கள் யார் வீட்டிலாவது உணவு அருந்தினால், ‘உணவு நன்றாக இருக்கிறது’ என்று சொல்ல மாட்டார்கள். ‘பெருமாள் நன்றாக அமுது படைத்திருக்கிறார்’ என்று சொல்வார்கள். அவர்கள், ‘எல்லாம் இறைவனின் அருளால் நமக்குக் கிட்டியது’ என்ற உண்மையை உணர்ந்தவர்கள்.ஆக, நிவேதனம் என்பது இறைவனின் கருணையைப் போற்றுகிற விஷயம்
Leave a Reply
You must be logged in to post a comment.