shadow

இந்தோனேஷியா பயணிகள் விமானம் திடீர் மாயம். 54 பயணிகள் கதி என்ன?

shadow

கடந்த ஆண்டு மலேசிய விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமானதில் அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்னவென்று இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், தற்போது 54 பயணிகளுடன் இன்னொரு விமானம் மாயமாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை திடீரென இழந்து மாயமாகியுள்ளதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மாயமான விமானத்தின் நிலை என்ன என்று இதுவரை சரியாக தெரியவில்லை. மேலும் மாயமான விமானத்தின் விவரங்களை இந்தோனேஷிய அதிகாரிகள் தீவிரமாகச் சேகரித்து வருகின்றனர். விமானத்தின் நிலை என்ன என்பது  குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது கடலில் விழுந்து விமானம் மாயமாகி விட்டதா? என்பது போன்ர பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், இதனால் இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 44 பயணிகளூம் 5 விமான ஊழியர்களும் இருந்ததாக தேசிய மீட்புக்குழு தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

கடைசியாக வந்த தகவலின்படி இந்த விமானம் மலையில் விழுந்து மோதியுள்ளதாகவும், அதன் பாகங்கள் மலைப்பகுதியில் சிதைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அருகில் உள்ள கிராமத்தினர் தெரிவித்ததை அடுத்து 150க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்துள்ளனர். பயணிகளின் கதி என்னவென்று இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

Leave a Reply