shadow

அமெரிக்காவில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்: அதிர்ச்சி தகவல்

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஷரத் கொப்பு என்ற இளைஞர் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர வி்டுதி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற ஷரத், ஐதராபாத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு அவர் மிசௌரி-கன்சாஸ் நகர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி, கன்சாஸில் உள்ள ஜே பிஷ் அண்ட் சிக்கன் மார்க்கெட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் ஷரத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 குண்டுகள் பாய்ந்து, படுகாயமடைந்த ஷரத் உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து ஷரத்தின் குடுபத்தினர்களில் ஒருவரான சந்தீப் வெமுலகொண்டா என்பவர் கூறியபோது, ‘ஷரத் ஜனவரியில் அமெரிக்கா சென்றான். மிசௌரி-கன்சாஸ் நகர பல்கலைக்கழகத்தில் படிக்க முழு ஊக்கத்தொகையும் பெற்றார். ஆனால் நேற்று இரவு ஷரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்தோம். இது தாங்க முடியாத வேதனை என்றார்.

ஷரத்தின் உறவினர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம், உடலை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். சிகாகோவில் உள்ள தூதரகமும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக டுவிட் செய்துள்ளது.

Leave a Reply