உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி ஜிம்பாவே அணியுடன் மோதி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீரநடை போட்டு வரும் இந்தியா, ஆறாவது வெற்றியையும் பெறுமா? என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து, ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு விக்கெட்டுக்கள் விரைவில் விழுந்துவிட்டாலும் அதன்பின் சுதாரித்து விளையாடிய ஜிம்பாவே அணியின் விக்கெட் கீப்பர் டெய்லர் மிக அபாரமாக விளையாடி 138 ரன்கள் குவித்தார். வில்லியம்ஸ் 50 ரன்களும், சிக்கிந்தர் ராஸா 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜிம்பாவே அணி 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனக்கு எதிராக விளையாடிய ஆறு அணிகளையும் ஆல் அவுட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 110 ரன்களும், கேப்டன் தோனி 85 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.