நானும் விஜய்சேதுபதியும் ஒண்ணுமே இல்லாமல் சென்னை வந்தவர்கள்: இளையராஜா
சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் இசைஞானி இளையராஜா, நடிகர் விஜய்சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:
விஜய்சேதுபதி நல்ல நடிகர் மட்டுமல்ல, அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படங்களை அவரே தயாரித்தும் வருகிறார். இந்த கல்லூரி எப்படி ஏழை மாணவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு கல்வி வழங்குகிறதோ, அதேபோல் விஜய்சேதுபதியும் புதியதாக திரையுலகிற்கு வரும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விஜய்சேதுபதியும், நானும் ஒன்றுமே இல்லாமல் சென்னைக்கு வந்தவர்கள். இன்று நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கின்றோம். அப்படிப்பட்டவர்களுக்கு தான் திறந்த மனதும் இருக்கும். இந்த திறந்த மனது மாணவர்களாகிய உங்களுக்கும் இருக்க வேண்டும்.
இந்த வயதில் என்னென்ன சாதிக்க வேண்டுமோ அத்தனையையும் சாதித்துவிடுங்கள். ஆனால் கனவு காணுங்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கனவு காணும் நேரத்தில், கனவு காண்பவன் பொய், காண்கின்ற கனவு பொய், அதை அறிகின்ற அறிவு பொய். நிஜமான நிகழ்வுகளே சில சமயம் கனவுபோல் போய்விடுகின்றது. எனவே கனவு காண்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் எதுவாக ஆக விரும்புகின்றீர்களோ, அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தால், நான் இசையமைப்பாளர் ஆனது போல் நீங்களும் ஒருநாள் நிச்சயம் நீங்கள் விரும்பிய இலக்கை அடைய முடியும்’
இவ்வாறு இசைஞானி இளையராஜா பேசினார்
Leave a Reply
You must be logged in to post a comment.