shadow

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னை மிரட்டினார். போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

evksபாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் அதிமுகவினர் உருவபொம்மை கொளுத்தி போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையில் வேலை பார்த்த பெண் ஊழியர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனால் மிரட்டப்பட்டதாக புகார் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அசோக்நகர், காவல் பயிற்சி பள்ளி குடியிருப்பில் வசிப்பவர் 50 வயது ஆர்.வளர்மதி என்பவர். இவர், நேற்று மாலை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவ்து:

”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் ஒரு அங்கமான தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் தொலைபேசி உதவியாளராக கடந்த 24 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தேன். காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமாக 120 கடைகள் உள்ளது. அந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகையை நானும், மேலாளர் நாராயணனும் சேர்ந்துதான் வசூலிப்போம். 35 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தும் ஒரு நபர் அந்த கடைகளுக்கு பெயர் மாற்றம் கேட்டுள்ளதாகவும், இதற்கு ஒரு கடைக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.3 கோடி பணத்தை அந்த நபரிடம் வாங்கும்படியும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நாராயணனும் என்னை வற்புறுத்தினார்கள்.

நான் அவ்வாறு பணம் கேட்க முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் நான் மிரட்டப்பட்டேன். தாக்கப்பட்டேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு முன்பு நடக்காத வகையில் இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டுகிறேன்” என்று அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

பின்னர் வளர்மதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கேரள முன்னாள் கவர்னர் மறைந்த பா.ராமச்சந்திரன் என்னை காமராஜர் அரங்கத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தியிடம் முறையிட உள்ளேன். போலீஸ் விசாரணையில் எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் பற்றி முழுமையாக சொல்வேன்” என்றார்.

புகாரில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றி வளர்மதி கூறாததால், அவர் தாக்கப்பட்டது குறித்தும், அவருக்கு வந்த கொலை மிரட்டல்கள் பற்றியும் செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால், அதுபற்றி இப்போது எதையும் கூற முடியாது என்று மட்டும் கூறிவிட்டு வளர்மதி சென்றார்.

Leave a Reply