சிட்லபாக்கம் இன்ஜினியர் கொலை வழக்கில் காவல்துறையினருக்கு துப்பு துலங்கியது. ஓரினச் சேர்க்கை தகராறில் கொலை நடந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிட்லபாக்கத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் டிசைன் இன்ஜினியர் விஜயகுமார். கடந்த 15 ஆம் தேதி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சிட்லபாக்கம் காவல்துறை ஆய்வாளர் மகாதேவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். என்றாலும், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில் இன்ஜினியர் விஜயகுமாரை கொலை செய்தவர்கள் யார், யார் என்பது பற்றிய துப்பு தற்போது துலங்கியுள்ளது. அவருடன் நெருங்கி பழகிய 4 பேர் இந்த கொலையை செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த அஜ்மீர் காஜா, நெடுங்குன்றம் பசிக் அஸ்லாம், திருப்பூர் வேல்முருகன், உத்திர பிரதேசத்தை சேர்ந்த தீரஜ் ஆகியோர் சேர்ந்து இன்ஜினியர் விஜயகுமாரை தீர்த்து கட்டியுள்ளனர்.
இதில் அஜ்மீர் காஜா, பைசிக் அஸ்லாம், வேல்முருகன் ஆகியோரை சிட்லபாக்கம் காவல்துறை ஆய்வாளர் மகாதேவன் கைது செய்தார். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பான தகராறில் விஜயகுமாரை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீரஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். விரைவில் அவரையும் கைது செய்வோம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீபத்தில் வேளச்சேரி வீனஸ் நகரில் வங்கி அதிகாரி நாகராஜ் ஓரின சேர்க்கை தகராறில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது சிட்லபாக்கத்திலும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.