10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்த, 6ஆம் வகுப்பு மாணவன் மறுக்க அந்த மாணவனை பள்ளியில் உள்ள கழிவு நீர்த் தொட்டியில் தள்ளி கொலை செய்த கொடூரம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அந்த 10ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலை கொண்டம்மன் சாலையை சேர்ந்தவர் கருணாகரன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பரிமளாதேவி. இவர்களுடைய மகன் ஹரிபிரசாத் (வயது 11). இவன் திண்டுக்கல் அருகேயுள்ள ம.மு.கோவிலூரில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 7-ந்தேதி காலை விடுதி அறையில் இருந்து மாணவன் ஹரிபிரசாத் தனது நண்பர்களுடன் வெளியே சென்றான். அதன் பின்னர் அவன் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே பள்ளிக்கூட விடுதியின் கழிப்பறை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஹரிபிரசாத்தின் உடல் கிடப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாணவன் ஹரிபிரசாத்தின் நெருங்கிய நண்பர்களிடமும், மற்றும் அவன் காணாமல் போன அன்று யாருடன் கடைசியாக வெளியே சென்றான் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பள்ளியில் படித்து வரும் மற்றொரு மாணவனே, ஹரிபிரசாத்தை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
விடுதியில் தங்கி படித்து வந்த ஹரிபிரசாத்திற்கு நண்பர்கள் சிலர் இருந்தனர். அதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் உண்டு. இவர் திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். அந்த 10-ம் வகுப்பு மாணவர், ஹரிபிரசாத்தை கட்டாயப்படுத்தி அடிக்கடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஓரினச்சேர்க்கைக்கு ஹரிபிரசாத் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினான். சம்பவத்தன்றும் ஹரிபிரசாத்தை 10-ம் வகுப்பு மாணவர் அழைத்துள்ளார். இதற்கு ஹரிபிரசாத் மறுப்பு தெரிவித்ததோடு, ஆசிரியரிடம் சொல்லி விடுவேன் என்று கூறினான். இதனால் பயந்து போன 10-ம் வகுப்பு மாணவர் நைசாக பேசி ஹரிபிரசாத்தை தனியாக அழைத்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் ஹரிபிரசாத்தை தள்ளிவிட்டு மூடியால் தொட்டியை மூடிவிட்டு சென்று விட்டார்.தொட்டிக்குள் விழுந்த ஹரிபிரசாத் கழிவுநீரில் மூழ்கி இறந்தான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஹரிபிரசாத்தை கழிவுநீர் தொட்டியில் தள்ளி கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவனை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.