சென்னை-மைசூரு-பெங்களூர்- இடையே அதிவேக ரயில். ஜெர்மனி குழுவுடன் ஆலோசனை
சென்னை – மைசூரு இடையே அதிவேக ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள் விரைவில் இந்தியாவுக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்னும் ஒருசில ஆண்டுகளுக்குள் அதிவேக ரயில்களை இயக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இதற்கான செயல் திட்டங்களையும் அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனி நாட்டின் ரயில்வே அமைச்சகத்தின் உயர்நிலைக் குழுவுடன் இந்திய ரயில்வே அதிகாரிகள் நேற்று புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ஜெர்மனி போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறைச் செயலாளர் மைக்கெல் ஓடென்வால்ட் தலைமையிலான குழு பங்கேற்றது.
அப்போது, இந்தியாவில் அதிகவேக ரயில்களை இயக்குவது குறித்த நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் இதன் முதல்கட்டமாக, சென்னை – பெங்களூரு- மைசூரு இடையேயான வழித்தடத்தில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அந்நாட்டு நிபுணர் குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் இதற்கான செலவினங்கள் அனைத்தையும் ஜெர்மனி அரசே ஏற்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.