உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வாழும் கிறிஸ்துவ மக்கள் வெகு உற்சாகமாக கிறிஸ்துமஸ் திருநாளை நேற்று கொண்டாடிய வேளையில் இங்கிலாந்து பயங்கர மழை, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தடைபட்டது.

நாடு முழுவதும் புயல் மற்றும் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியேறவில்லை. முக்கிய சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பெரும் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் வேறோடு சாய்ந்து போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. நேற்று கிளம்ப வேண்டிய விமானங்கள், ரயில்கள் ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

நேற்று லண்டன் நகரில் மட்டும் சுமார் 37,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டது. சாலைகளில் இருந்த மின்கம்பங்களில் மரங்கள் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bournemouth மற்றும் Leatherhead பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமார் 150 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். தீயணைப்புப்படையினர்களும், எமர்ஜென்ஸி மீட்புப்படையினர்களும் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

இங்கிலாந்து முழுவதும் வீசிய புயல்காற்று காரணமாக இதுவரை 23,379 வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும், மின்சார ஊழியர்கள் இரவு பகல் பாராது பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply