சோமாலியாவில் கடும் புயல்: 15 பேர் பரிதாப பலி
உலகிலேயே வறுமையின் பிடியில் உள்ள நாடுகளில் முதன்மையானதாக கூறப்படும் சோமாலியாவில் கடும் புயல் வீசி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
சோமாலியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பஞ்சம் நிலவி வந்த நிலையில் தற்போது அங்கு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இந்த வெள்ளத்தினால் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்நாட்டின் விவசாய நிலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
ஏற்கனவே, கடும் வறட்சியால் சோமாலியா பாதிக்கப்பட்டிருந்ததால், 2018-ம் ஆண்டுக்கான நிவாரண உதவியாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் கோரியிருந்தனர். அதில், 24 சதவிகித தொகை மட்டுமே நிவாரண உதவியாக வந்து சேர்ந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.