பிரதமரின் ரூ.50 லட்ச நிதியுதவியை ஏற்க மறுத்த காஷ்மீர் வக்கீல்கள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையின் பாதிப்புக்கு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற வளாகமும் தப்பவில்லை. அந்த நீதிமன்றத்தில் அமைந்துள்ள நூலகம் ஒன்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான சட்ட புத்தகங்கள் மற்றும் பல முக்கிய வழக்குகள் தொடர்பான குறிப்புகள் அனைத்தும் சேதமடைந்தன.
இந்த நூலகத்தை புதுப்பிக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் நிதியளித்து வரும் நிலையில் பிரதமரின் சிறப்பு நிவாரண நிதியில் இருந்தும் ரூ.50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகையை காஷ்மீர் வக்கீல்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த வக்கீல்கள் சங்கத்தினர் ‘பிரதமரிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்தவித நிதியுதவியையும் ஏற்றுக்கொண்டால் எங்கள் சங்கம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ள பல தீர்மானங்களுக்கு எதிரான செயலாக அது அமைந்துவிடும்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எங்களது முந்தைய தீர்மானத்தை அது சீர்குலைத்து விடும். முஹம்மது காசிம் முதல் கிலானிவரை நூற்றுக்கணக்கானவர்கள் காஷ்மீர் பிரச்சனைக்காக சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர். இதே பிரச்சனைக்காக குரல் கொடுத்ததற்காக கன்னயா குமார், உமர் காலித் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமரிடம் இருந்தோ, மத்திய அரசைச் சேர்ந்த வேறெந்த துறையில் இருந்தோ கிடைக்கும் நிதியுதவியை நாங்கள் ஏற்றுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனைக்காக உயிர்தியாகம் செய்த எங்கள் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் மரணம் அர்த்தமற்றதாகி விடும்’ என்று கூறினர். பிரதமரின் நிதியுதவியை காஷ்மீர் வக்கீல்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Today News: HCBA rejects PM’s Rs 50 lakh relief package for library
Leave a Reply
You must be logged in to post a comment.