பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 29000 பேர் ஒன்றிணைந்து மனித தேசிய கொடி ஏற்படுத்தி கின்னஸ் சாதனை புரிந்தனர். அந்த சாதனை நேற்று சென்னையில் முறியடிக்கப்பட்டது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற மனித தேசியக்கொடி நிகழ்ச்சியில் 50,000 பேர் கலந்து கொண்டனர். இந்திய தேசிய கொடியின் நிறங்களான ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிற கொடிகளை பிடித்துக்கொண்டு நின்ற இந்த காட்சி காண்போரை கவர்நதது.
இந்த நிகழ்ச்சிக்காக காலை 6 மணி முதலே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் வரத் தொடங்கினர். மைதானத்தின் அனைத்து வாயில்கள் வழியாகவும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வெகு ஆர்வத்துடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொடி உருவாக்கம் நடைப்பெறும் பிரதான மைதானத்தின் வாயிலில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற அட்டைகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
அந்த வண்ண அட்டைகளை பெற்ற பின் மாணவர்கள் தேசிய கொடி வடிவில் நின்றனர். ஓரிரு பயிற்சிக்கு பிறகு கின்னஸ் சாதனைக்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டது. சரியாக 5 நிமிட முடிவில், கின்னஸ் அமைப்பின் சார்பாக கலந்துகொண்ட துருக்கி நாட்டை சேர்ந்த ஷாகிலா, கின்னஸ் சாதனையை அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை ரோட்டரி இந்தியா அமைப்பு நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.