லாலு-கெஜ்ரிவால் கைகோர்ப்பு. அன்னா ஹசாரே கடும் கண்டனம்
மாட்டுத் தீவன ஊழல் காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சனம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அவருடன் கைகோர்த்து நின்றது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் குரு என்று கூறப்படும் அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்னா ஹசாரே நேற்று நிருபர்களிடம் கூறும்போது ‘‘அரவிந்த் கெஜ்ரிவாலின் சகவாசத்தை நான் விட்டொழித்து விட்டது நல்லதாகி விட்டது. இல்லாவிட்டால் என்னையும் ஊழல்வாதிகள் பட்டியலில் இணைத்திருப்பார்கள். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த கெஜ்ரிவால், மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலு போன்றவர்களின் கரங்களை பிடித்து மகிழ்ச்சியாக குலுக்குவதும், கட்டி அரவணைப்பதும் சரியாக தோன்றவில்லை’ என்று கூறினார்.
மேலும் ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவரான யோகேந்திர யாதவ் இதுகுறித்து கூறியபோது, ‘அரசியலில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் லாலுவுடன், கெஜ்ரிவால் இணைந்தது அவமானமாக இருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் லாலு மீது டுவிட்டரில் கடுமையான விமர்சனம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், திடீரென லாலுவுடன் சமரசம் செய்து கொண்டது புரியாத புதிராக இருப்பதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.