வவுனியாவில் சிறப்பாக நடந்த ரஜினி மிஸ் செய்த வீடு வழங்கும் விழா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது தாயார் பெயரில் இருக்கும் அறக்கட்டளை மூலம் வவுனியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு 150 வீடுகள் கட்டியுள்ளார். இந்த வீடுகளை ஒப்படைக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருந்து, பின்னர் அது தமிழக அரசியல்வாதிகள் சிலரின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 150 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் விழா இந்த விழாவுக்கு லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், இங்கிலாந்து அனைத்துக்கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத்தலைவர் ஜேம்ஸ் பெர்ரி எம்.பி. மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் எம்.பி., லைகா நிறுவன துணைத்தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பேசியதாவது:- அரசின் போக்கை பொறுத்தமட்டில், பழைய அரசாங்கத்துக்கும், புதிய அரசாங்கத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இந்த மாற்றம் மட்டுமே தீர்வு ஆகிவிட முடியாது. போரின்போதும், போருக்கு பின்னரும் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நல்லதொரு முடிவு எடுக்கவேண்டும்.
புதிய அரசு அமைந்து 2 வருடங்கள் ஆகிறது. எனவே, மக்கள் பிரச்சினையில் அவர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும். மக்களின் காணி நிலங்கள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நிலங்களை இனியும் ராணுவம் பயன்படுத்தக்கூடாது. அந்த நிலங்களில் வணிகம் நடக்கக்கூடாது.
இலங்கையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஐ.நா.வில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதொடர்பாக உள்நாட்டு ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நாங்கள் அக்கறை எடுப்போம். உங்களுக்கு வீடுகள் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. ஏனைய வசதிகளும் உங்களுக்கு கிடைத்தால் அது இரட்டிப்பாக மாறும்.
லைகா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா கூறுகையில், “ஈழத் தமிழர்களுக்காக நான் எந்த உதவியும் செய்யத்தயாராக இருக்கிறேன். இலங்கை அரசு தனது ஆதரவை தரும்பட்சத்தில், இலங்கையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறேன். எனவே, இலங்கை அரசு எங்கள் நலத்திட்டங்களுக்கு உதவவேண்டும்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.