‘என்னை அறிந்தால்’ வெற்றி படத்தை அடுத்து கவுதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் உருவான ‘தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும்’ என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கில் விரைவில் வெளியாக இருக்கின்றது. தெலுங்கில் இந்த படம் கூரியர் பாய் கல்யாண்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய படங்கள் டிராப் ஆனது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். ‘நான் எப்போதுமே கதையின் கிளைமாக்ஸை படப்பிடிப்பின் இடையில்தான் தீர்மானிப்பேன். இது சூர்யா உள்பட என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் படத்தின் முடிவை கூறினால்தான் நடிப்பேன் என சூர்யா என்னை கட்டாயப்படுத்தினார். மேலும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போதே, இந்த படத்தில் இருந்து விலகுவதாக பத்திரிகைகளிடம் அறிவித்து என்னை மனதளவில் காயப்படுத்திவிட்டார்.
ஆனால் விஜய் விஷயம் வேறு. “யோஹன் அத்தியாயம் ஒன்று’ படத்தை பொருத்தவரை அது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தை போன்ற திரைக்கதை. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க அந்த படத்தில் விஜய் ஒரு என்.ஆர்.ஐ ஆக நடிக்கவிருந்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு என்னை விஜய் அழைத்து, இந்த கதை தனக்கு முழு திருப்தியை தரவில்லை என்றும், எனது ரசிகர்கள் இந்த கதையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் என்னிடம் முறையாக கூறிவிட்டு அதன்பின்னர் விலகினார். சூர்யாவை போல அவர் என்னை காயப்படுத்தவில்லை’ என்று கூறினார். கவுதம் மேனனின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.