அதிமுக கூட்டணியில் தாமக. ஜெயலலிதாவை சந்திக்கிறார் வாசன்
வைகோ ஆரம்பித்து வைத்த மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தேமுதிக வராவிட்டாலும் பரவாயில்லை, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியாவது மக்கள் நலக்கூட்டணியில் இணையும் என அந்த கூட்டணியின் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுகவிடம் இருந்து ஜி.கே.வாசனுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் வரும் 23ஆம் தேதி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஜி.கே.வாசன் தொகுதி பங்கீடுகள், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அதிமுக தலைமையும் உறுதி செய்துள்ளது.
இதனால் மக்கள் நலக்கூட்டணியின் கனவு கலைந்து கொண்டே போகிறது. வெறும் நான்கு கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு மக்கள் நலக்கூட்டணி தேர்தலை சந்தித்தால் அதிகபட்சம் ஐந்து தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த தேர்தலில் தங்கள் பலத்தை காண்பிக்காத கட்சிகளுக்கு எதிர்காலமே இல்லை என்ற கருத்து நிலவி வரும் நிலையில் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகவும், அனேகமாக எச்.ராஜா நேற்று கூறியவாறு இந்த கூட்டணி உடையவும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.