விடுதலைப்புலிகளை தவறாக சித்திகரித்து தயாரிக்கப்பட்ட புலிப்பார்வை’ திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்றும் எங்களை மீறி படத்தை வெளியிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் தமிழன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “இலங்கையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை நடத்தி வரும் புலிப்பார்வை படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தர், இலங்கை அரசுக்கு எதிராக எப்படி படத்தை தயாரித்து இருப்பார்? அவர் கண்டிப்பாக விடுதலைபுலிகளுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும்தான் படத்தை எடுத்திருப்பார் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. மேலும், அதை உறுதி செய்யும் விதமாக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை அடித்து காயப்படுத்தியதோடு அவர்கள் மீது பொய் வழக்கும் போடப்பட்டுள்ளது.
புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவுக்கு சீமானை அழைத்து வந்தால் புலிகளின் ஆதரவாளர்களை வாயடைத்துவிடலாம் என்று பாரிவேந்தர் தப்புக்கணக்கு போட்டுள்ளார். பாரிவேந்தரிடம் சீமான் போன்றவர்கள் விலைபோனாலும் நாங்கள் விடமாட்டோம். இந்த படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறுவர்களை தனது படையில் சேர்த்து துப்பாக்கி ஏந்தி போராட வைத்துள்ளதைப் போன்ற அவதூறான காட்சிகள் உள்ளது.
எனவே, ‘புலிப்பார்வை’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு எங்களுக்கு அந்த படத்தை போட்டு காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் தென் தமிழகத்தில் ஒரு தியேட்டரில் கூட படத்தை ஓட விடமாட்டோம். அதையும் தாண்டி, அந்த திரைப்படத்தை வெளியிட்டால், அந்த படத்தை திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்” என்று கூறியுள்ளார். ஃபார்வர்டு பிளாக் தமிழனின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.