shadow

உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்

Mullaivendhanகடந்த ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் விஜய்காந்த்தின் தேமுதிக கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் திமுக குறித்து குறிப்பிடுகையில் உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது என்றும் திமுக தற்போது கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஸ்டாலின் தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

 கடந்த 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 1996 ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் முல்லைவேந்தன். இவர் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, அமைச்சர் முல்லைவேந்தனுக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தலைமை அனுப்பிய நோட்டீஸுக்கு முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்பதை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவர் விரைவில் அ.தி.மு.கவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முல்லைவேந்தன், திடீரென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. கருணாநிதி கையில் அந்த கட்சி இல்லை. பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார். மற்றதை எல்லாம் மு.க.ஸ்டாலின் தான் கவனித்து வருகிறார். மு.க.அழகிரி எனது வீட்டிற்கு வந்தார் என்பதற்காக அவரது ஆதரவாளர் என்று என்னை கூறினார்கள். விரைவில் நான் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணைய உள்ளேன். அதில் 90 சதவீதம் பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்” என்றார்.

Leave a Reply