திருமணத்திற்கு முன் கர்ப்பம். கம்பி எண்ணும் காதலர்கள்
திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமடைந்ததால், காதல் ஜோடி ஒன்று அபுதாபி நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அரேபிய நாடுகளில் ஒன்றான அபுதாபியில், திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது என்பது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி அங்கு வசிக்கும், வேலை செய்யும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தென்னாப்ரிக்கா நாட்டை சேர்ந்த சேர்ந்த எம்லின் என்பவரும், அவருடைய காதலியான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இரினா என்பவரும் அபுதாபியில் தங்கி ஒன்றாக வேலை செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் இரினாவுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எம்லின் அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது இரினா கர்ப்பம் என்பது தெரியவந்தது. உடனே அந்த ஜோடியின் திருமணச் சான்றிதழை மருத்துவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள், தங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் தாங்கள் காதலித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அபுதாபி சட்டத்திற்கு விரோதமாக திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் உடலுறவு கொண்டு, இரினா கர்ப்பமடைந்துள்ளார் என்பதால் இது குறித்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் அபுதாபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருவரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.